×

பரிவோடு கேட்டதோடு புதுச்சேரி வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு உதவி செய்வதாக பிரதமர் மோடி உறுதி: முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்துக்கு உதவ பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முக்கியமாக நீர் சேமிப்பு, ஏரி குளங்கள் தூர்வாருதல், வீடுகளில் மழைக்காலங்களில் தண்ணீரை சேமித்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலங்களில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் ஆதாரத்தை பாதுகாக்க முடிவு செய்யப்பட்டது. நீர் கொள்கையை அறிவித்து நீர் சேமிப்பு, நீர் நிலைகளை தூர்வாருதல், அதற்கான நிதி ஆதாரம் ஒதுக்குதல், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் 16 ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ஏரி சங்கங்கள் தூர்வாரும் பணியை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என துணைநிலை ஆளுனரிடம் முறையிட்டனர்.

அரசு இதனை ஏற்க மறுத்து டெண்டர் மூலம் குறைந்த செலவில் தூர்வாருவதற்கான முயற்சியில் இறங்கியது. இதனை எதிர்த்து ஏரி சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் டெண்டர் மூலம் ஏரிகளை தூர்வாரலாம் என அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. துணை நிலை ஆளுனர் தலையீட்டினால் தான் இந்த 16 ஏரிகளும் காலத்தோடு தூர்வாரப்படவில்லை. ஓராண்டு காலம் வீணாக காலதாமதம் ஏற்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கடுமையான வறட்சி நிலவுகிறது. குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்தினால் எதிர்கால சந்ததியினருக்கு நீர் கிடைக்காமல் போகலாம். எனவே புதுச்சேரி பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சில கிராமங்களில் குடிநீர் பிரச்னை இருப்பதாக புகார்கள் வந்துள்ளது. பொதுப்பணித்துறை, நகராட்சி, கொம்யூன் அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியை சந்தித்து, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் சட்ட வரையறையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். புதுச்சேரியை மாநிலமாக கருதி 15வது நிதிக் கமிஷனில் சேர்க்க வேண்டும். அப்போது தான் புதுச்சேரிக்கு 42 சதவீதம் மத்திய அரசின் மானியம் கிடைக்கும். தற்போது மிகக் குறைந்த அளவிலான 26 சதவீதம் தான் கிடைக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக 6வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியபோது, அதற்கான நிலுவை தொகையை மத்திய அரசு இன்னமும் வழங்கவில்லை. அதேபோன்று 7வது சம்பள கமிஷன் அமல்படுத்தியதற்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும். டெல்லியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய தொகையை மத்திய அரசே ஏற்கிறது. ஆனால் புதுச்சேரியை யூனியன் பிரதேசமாக கருதும் மத்திய அரசு அதற்கான நிதியை வழங்கவில்லை.

புதுச்சேரி மாநிலத்தின் ஆரம்ப கால கடன் ரூ. 2100 கோடியில் அசல் மற்றும் வட்டி ரூ. 1100 கோடி ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள ரூ. 1000 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களுக்கான நிதி 60 சதவீதமாக குறைந்துள்ளது. முதலில் 90 சதவீதம் கிடைத்தது. எனவே மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதியை முழுமையாக கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளையெல்லாம் பிரதமரிடம் தெரிவித்தபோது, பரிவோடு கேட்டதோடு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதே கோரிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசுமாறும் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை ஏதுவும் விதிக்கப்படவில்லை.

கடந்த 7ம் தேதி போட்ட அதே உத்தரவான நிதி, நிலம் தொடர்பான முடிவுகளை அமைச்சரவை எடுக்கலாம். ஆனால் செயல்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ள உத்தரவு தான் தொடர்கிறது. எனவே அமைச்சரவை முடிவெடுக்க தடையில்லை. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட 3 முடிவுகளில் மஞ்சள் அட்டைக்கும் இலவச அரிசி வழங்க வேண்டும் என்ற முடிவுக்கு துணை நிலை ஆளுனரின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அதற்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Modi ,Puducherry , Puducherry Development Project, Assistant, Prime Minister, Narayanasamy
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...