உறவினருடன் பைக்கில் சென்றவரை வழிமறித்து கொடூரம் சேலத்தில் கல்லூரி மாணவி பலாத்காரம்: பிரபல ரவுடி உள்பட 3 பேர் கைது

சேலம்: சேலத்தில் அக்கா கணவருடன் பைக்கில் வந்த கல்லூரி மாணவியை புதருக்குள் தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த பிரபல ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 18ம் தேதி மாலை, தனது அக்கா கணவருடன் பைக்கில், சேலம் கடைவீதிக்கு புத்தகம் வாங்கச் சென்றார். பின்னர், இரவு 8 மணியளவில் வீடு திரும்பினர். மாமாங்கம் அருகே ஐடி பார்க் பகுதியில் செல்லும்போது, 2 பைக்குகளில் 5 பேர் கும்பல் வந்து அவர்களை வழி மறித்துள்ளனர். அவர்கள், மாணவியின் அக்கா கணவரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த 10ஆயிரம், வாட்ச், வெள்ளி கைச்செயின் ஆகியவற்றை பறித்துள்ளனர்.

அப்போது அக்கும்பலைச் சேர்ந்த ஒருவன் மட்டும் கல்லூரி மாணவியை மறைவான புதருக்குள் குண்டுகட்டாக தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர், வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு, 5 பேரும் தப்பியுள்ளனர். இதையடுத்து தீவிர ஆலோசனைக்குபின் 2 நாட்கள் கழித்து சேலம் போலீஸ் கமிஷனர் சங்கரிடம் மாணவி புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில், சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவத்தில் ஈடுபட்டதாக அஸ்தம்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி ஜெயபிரகாஷ் (30), மணிகண்டன் (35), குமார் (35) உள்ளிட்ட 5 பேர் என தெரியவந்தது. இவர்களில் ஜெயபிரகாஷ், கூட்டாளிகளான மணிகண்டன், குமார் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

பிரபல ரவுடி ஜெயபிரகாஷ் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘‘மதுகுடித்து ஜாலியாக இருக்க சாலையில் பைக்கில் வரும் நபர்களை வழிமறித்து பணம் பறிப்போம். சம்பவத்தன்று, இளம்பெண்ணுடன் வந்த நபரை வழிமறித்தோம். அவரை தாக்கி பணம், வாட்ச், வெள்ளி கைச்செயினை பறித்தோம். அந்த பெண், அழகாக இருந்ததால் தனியாக இழுத்துச் சென்று பலாத்காரம் செய்தேன்’ என வாக்குமூலம் அளித்தார்.

Related Stories: