சென்னை: சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மேலும் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து காணப்படுவதால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதன்காரணமாக ஐடி நிறுவனங்கள் சில தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தியிருந்தனர். மேலும் சென்னையில் சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், குடிநீர் லாரிகளின் சேவை சென்னையில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளில் இருந்து குடிநீர் லாரிகள் தண்ணீரை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை நங்கநல்லூர் மற்றும் பழவந்தாங்கலில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து வருவதாக இளையராஜா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.