சென்னையில் தனியார் சேமிப்பு கிடங்கில் 120 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சென்னை: சென்னை பாரிமுனை அருகே தனியார் நிறுவன சேமிப்பு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பாரிமுனை அருகே மண்ணடி பகுதியில் உமாஷங்கர் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ கிருஷ்ணா டிரான்ஸ்போர்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி ஐந்தாவது மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் இந்த சோதனையில் சுமார் 120 அட்டை பெட்டிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கிடங்கின் உரிமையாளர் உமாஷங்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் இது முதல் முறை என்பதால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்த மாநகராட்சி அதிகாரிகள் அடுத்தமுறை 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், மூன்றாவது முறை 1 லட்சம் ரூபாய் அபராதம் மட்டுமின்றி நிறுவனத்தின் உரிமமும் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தனர்.

Related Stories: