சென்னை: ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்தவர் கண்ணன் (39). உயர் நீதிமன்றத்தில் வெங்கடேசன் என்கிற வக்கீலிடம் குமாஸ்தாவாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வக்கீல் மனைவி லதாவுக்கு சொந்தமான 38 சவரன் நகைகள் மற்றும் வைரம் நகைகளை தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் அடகு வைக்க குமாஸ்தா கண்ணன் வக்கீல் மனைவி லதாவுடன் சென்றுள்ளார். கடையில் இருந்த ஊழியர்கள் அவர்களிடம் பழைய நகைகளை வாங்க வேண்டும் என்றால் அதற்கான ரசீதுகளை கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு நகைக்கான ரசீதுகள் கொடுக்க முடியாது என கூறிவிட்டு, ‘‘நாங்கள் யார் என்று தெரியுமா? உயர் நீதிமன்ற நீதிபதியிடம் ஜூனியராக வேலை செய்தவர் வெங்கடேசன். நானும் அவருடன் வேலை செய்தவன்’’ என கூறி தகராறில் ஈடுபட்டார். மேலும், ‘‘வேண்டும் என்றால் நீதிபதியை உங்கள் முதலாளியிடம் பேச சொல்லவா?’’ என்று மிரட்டியுள்ளார். மேலும் வக்கீல் வெங்கடேசனும் போன் மூலம் நீதிபதியிடம் வேலை செய்வதாக கூறியுள்ளார்.