தாம்பரம்: பெருங்களத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசிக்கின்றனர். இதில் தாம்பரம்-முடிச்சூர் சாலையில் உள்ள பழைய பெருங்களத்தூர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே உள்ள உயர்கோபுர மின்விளக்கின் கீழ் பகுதியில் உள்ள காங்கிரீட் சேதமடைந்துள்ளதால் அப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் உயர்கோபுர மின்விளக்கு எந்த நேரமும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. உயர்கோபுர மின் விளக்கு கீழே விழுந்தால் அப்பகுதி வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய அசம்பாவித சம்பவம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த உயர்கோபுர மின் விளக்கை உடனே சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பெருங்களத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தாம்பரம்-முடிச்சூர் சாலையில் பழைய பெருங்களத்தூர் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து முடிச்சூர், மண்ணிவாக்கம், படப்பை, வண்டலூர், பெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் மூலம் இந்த பேருந்து நிறுத்தத்துக்கு வந்து பஸ் ஏறி செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கின் அடிப்பகுதியில் காங்கிரீட் பூச்சு வலுவிழந்து விழுந்துள்ளது. மேலும் அப்பகுதியில் மழைநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டியபோது ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பள்ளத்தை மூடவும், சேதமடைந்துள்ள உயர்கோபுர மின் விளக்கை சரி செய்யவும் உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.