சென்னை: வீரன் அழகுமுத்து கோன் அரண்மனை, மணிமண்டப நுழைவாயில் பாழடைந்து உள்ளதால், தமிழக அரசு அதை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரரும், ஆங்கிலேய அரசுக்கு வரிகட்ட மறுத்த காரணத்தால் பீரங்கி முனையில் சுட்டுக் கொல்லப்பட்ட தியாகி அழகுமுத்து கோன் நினைவுநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று கோகுல மக்கள் கட்சி சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று, மாவட்ட அளவில் அரசு விழா கொண்டாடப்பட்ட நிலையை மாற்றி, மாநிலம் தழுவிய அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி.
ஆண்டுதோறும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவில் உள்ள காட்டாங்குளத்தில் அழகுமுத்து கோன் விழாவை அனைவரும் சிரமமின்றி கொண்டாடும் வகையில் 144 தடை உத்தரவை தளர்த்த வேண்டும். அஞ்சலி செலுத்த வந்து செல்பவர்கள் எந்த வாகனங்களில் வந்தாலும் அவர்களை காவல் துறையினர் அனுமதிக்க வேண்டும். அழகுமுத்து கோன் அரண்மனை, மணிமண்டப நுழைவாயில் ஆகியவை பாழடைந்து, புதர்கள் மண்டிய நிலையில் உள்ளது. அவற்றை சீரமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.