திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வெளியில் இருந்து குடிநீரை காசு கொடுத்து வாங்கி வருவதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 200 டாக்டர்களும், 250 நர்ஸ்களும் பணியாற்றி வருகின்றனர். நோயாளிகளுக்காக சுமார் 400 படுக்கைகள் உள்ளன. இம்மருத்துவமனைக்கு திருவண்ணாமலை, வேட்டவலம், கீழ்பென்னாத்தூர், செங்கம், போளூர், மங்கலம் போன்ற சுற்றுப்புற பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், 300க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், இம்மருத்துவமனையில் குடிநீர் போதுமான அளவில் இல்லை. இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தியிருந்தும் பலனில்லை. குடிப்பதற்கு லாயக்கற்ற நிலையில் வருகிறது.
இதனால் மருத்துவமனையில் தங்கி உள்ள நோயாளிகள், தங்களுக்கு தேவையான குடிநீரை வெளியில் இருந்து, அதிக விலை கொடுத்து வாங்கி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, அதனை டேங்கில் நிரப்பி, மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால், அதுவும் போதுமானதாக இல்லை. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தண்ணீருக்காக அலைவது பரிதாபமாக உள்ளது.