×

கோவில்பட்டி அருகே கர்ப்பிணி மனைவி கொலை: மாமன் மகனை திருமணம் செய்வேன் என்றதால் கொன்றேன்... தற்கொலைக்கு முயன்ற கணவர் பரபரப்பு வாக்குமூலம்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கர்ப்பிணி மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற கணவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில், மாமன் மகனை திருமணம் செய்வேன் என்றதால் தீர்த்துக்கட்டியதாக தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள சத்திரபட்டியைச்சேர்ந்த மருதையா-பேச்சியம்மாள் தம்பதியினரின் மகன் மாரியப்பன்(28). இவருக்கும் கோவில்பட்டி பகுதி புதுக்கிராமத்தைச்சேர்ந்த ஜெயராஜ்-செல்வி தம்பதியினரின் மகள் சண்முகபிரியா(25) என்பவருக்கும் கடந்த 17.2.19 அன்று திருமணம் நடந்தது. தற்போது சண்முகபிரியா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் நேற்று அதிகாலை 3 மணிக்கு சண்முகபிரியா கழுத்து அறுக்கப்பட்டு வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசிற்கு பயந்து மாரியப்பன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைபெறும் அவர் எதற்காக மனைவியை கொலை செய்தார் என்ற பரபரப்பு தகவலை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலம்:
கேட்டரிங் (சமையல் படிப்பு) முடித்துள்ள எனக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் கூப்பிட்ட வேலைக்கு சென்று வந்தேன். அதில் போதிய வருமானம் இல்லை. இதனால் எனக்கும் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது. இனி இங்கிருந்தால் பிழைக்கமுடியாது என கருதி வெளிநாடு செல்ல முடிவு செய்தேன். அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து இன்னும் 15 நாளில் வெளிநாடு செல்ல இருந்தேன். இதையறிந்த எனது மனைவி, நீங்க வெளிநாடு போக கூடாது. இங்கேயே வேலைபார்த்து பிழைத்துக்கொள்ளலாம் என்றாள். அதற்கு நான், எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன்...

நான் போய்த்தான் ஆகவேண்டும் என்று உறுதியாக சொன்னேன். நான் சொல்றதை கேட்க மாட்டீங்க...குடியை கைவிட்டுட்டு ஊரிலே ஒழுங்கா வேலைபார்த்தாலே போதும்.. என்று அவளும் போக கூடாது என பிடிவாதம் பிடித்தாள். அதிகாலை 3 மணிக்கு எனக்கும், அவளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உங்களை கட்டியதற்கு என் மாமன் மகனை கட்டியிருந்தால் இந்த மாதிரி நடக்காது..என்னை கண்கலங்காம பாத்திருப்பான் என்று அழுது புலம்பினாள். சரி..நீ சொல்றபடியே இங்கேயே இருந்து வருமானமின்றி செத்து தொலையுறேன்...ஒரு வேளை நான் செத்து போயிட்டா நீயும் சொத்துவிடுவியா? என்று ஆவேசத்தில் மனைவியிடம் கேட்டேன். அதற்கு அவள், நீங்க இல்லாட்டி எனது மாமன் மகனை திருணம் செய்து கொள்வேன் என்று சொன்னதுதான் தாமதம், தாலிய கட்டிய என்னை விட உனக்கு மாமன் மகன்தான் பெரிசா போச்சா..

என நானும் சண்டை பிடித்தேன். உடனே அவள் வீட்டில் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து என்னை குத்த முயன்றாள்.. அந்த கத்தியை பிடிங்கி, அவளை படுக்கையில் தள்ளி தலையை அசையாமல் பிடித்துக்கொண்டு ஆட்டை அறுப்பதுபோல் கழுத்தை அறுத்தேன். ரத்தம் பீறிட்ட அவள் சிறிது நேரத்தில் இறந்து விட்டாள். ஏதோ ஆத்திரத்தில் இப்படி ஆகிவிட்டதே..நம்மை போலீசார் பிடித்தால் சும்மா விடமாட்டார்கள்..நாமும் செத்து போகவேண்டியதுதான் என நினைத்து அந்த கத்தியால் எனது கழுத்தை அறுத்தேன். அதன்பிறகு என்ன நடந்தது என தெரியாது அப்படியே மயங்கி விட்டேன். போலீசார் வந்து மீட்டு மருத்துவனையில் சேர்த்தனர். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது.

பாக்ஸ்..... 2 வயதில் பெற்றோரை இழந்தவர்
மனைவியை கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள மாரியப்பன் உடன் பிறந்தவர் ஒரு அக்காள் மட்டும் உள்ளார். அவரும் சத்திரபட்டியில் கணவருடன் வசித்து வருகிறார். மாரியப்பன் பெற்றோர் இவருக்கு 2 வயதாக இருக்கும்போதே இறந்து விட்டனர். இதனால் தாத்தா-பாட்டி மற்றும் அக்காள் குடும்பத்தினர் மாரியப்பனை வளர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் பாசமாக வளர்ந்த தாத்தா 10 ஆண்டுக்கு முன்பும் பாட்டி 5 ஆண்டுக்கு முன்பும் இறந்து விட்டனர். கடந்த 5 மாதத்திற்கு முன்புதான் அக்காள் காளியம்மான் தம்பி மாரியப்பனுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். அக்காள் வீட்டிற்கு எதிரே மாரியப்பனுக்கு சொந்த வீடு உள்ளது. ஏற்கனவே அக்காள் வீட்டில் சாப்பிட்டு வந்த அவர் திருமணத்திற்கு பிறகும் அவர்கள் வீட்டில் தொடர்ந்து சாப்பிட்டனர். இரவு மட்டும் தங்குவதற்கு சொந்த வீட்டிற்கு சென்று விடுவார்கள்.

மாரியப்பன் வீட்டில்தான் பிரிட்ஜ் உள்ளது. நேற்று காலை 6 மணிக்கு பிரிட்ஜில் உள்ள காய்கறியை எடுப்பதற்காக அக்காள் அவர்கள் வீட்டிற்கு சென்றார். கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து கணவர் உதவியுடன் ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது சண்முகபிரியா கொலை செய்யப்பட்டு கிடப்பதையும் மாரியப்பன் தரையில் ரத்தம் வழிந்த நிலையில் படுத்திருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கடப்பாரையால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். மாரியப்பன் முகத்தில் தண்ணீர் தெளித்தபோது அவர் லேசாக கண்விழித்து பார்த்துள்ளார். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பெற்றோர் பாசத்தால் பச்சை குத்திய மகள்
கொலையான சண்முகப்பிரியாவுக்கு அக்காள் மற்றும் அண்ணன் உள்ளனர். இவர்தான் கடைக்குட்டி. இதனால் பெற்றோர் அவரை மிகவும் செல்லமாக வளர்த்துள்ளனர். அதே போல் சண்முகபிரியாவும் பெற்றோருக்கு ஏதாவது ஒன்னுன்னா துடிச்சிபோய்விடுவாராம். தன்னை பெற்றெடுத்து வளர்த்தவர்கள் காலம் முழுவதும் தன் நெஞ்சில் இருக்க வேண்டும். அவர்கள் நினைவாக வாழவேண்டும் என்ற ஆசையில் சண்முகபிரியா தனது மார்பில் பெற்றோர் பெயரை பச்சை குத்தியுள்ளார். இது அவர்கள் குடும்பத்தினருக்கு மட்டும்தான் தெரியும். திருமணத்திற்கு பின் கணவர் மாரியப்பன் மார்பில் பச்சை எதற்காக குத்தியிருக்கிறாய்? என கேட்டபோதுதான் அவர் பெற்றோர் மீதுள்ள பாசத்தை தெரிவித்திருக்கிறார். கணவன்-மனைவிடையே குடும்ப சண்டை நடப்பது சகஜம்தான். சண்முகபிரியா விளையாட்டாக மாமன் மகனை கட்டிக்கொள்வேன் என்று சொன்னது கடைசியில் அவருக்கே வினையாகி விட்டது.

Tags : Kovilpatti, pregnant wife killed
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை