தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை : ஜூன் 22 முதல் அமைதியான முறையில் திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை : தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க ஜூன் 22 முதல் மாவட்ட வாரியாக திமுக தொடர் போராட்டம் நடத்தப்போவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தை எடப்பாடி அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த போராட்டம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கூறிய அவர்; உள்ளாட்சித்துறை அமைச்சரின் அக்கறையற்ற தன்மையால் குடிநீரின்றி மக்கள் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லை என அமைச்சர் வேலுமணி கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது; அமைச்சர் வேலுமணி கூறுவதுபோல் நிலைமை இல்லை என்று கூறினார். மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் குடிநீர் இன்று அவதிப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தண்ணீர் பஞ்சம் நிலவும் இடங்களில் போராட்டம் நடத்தப்படும். மேலும் திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆங்காங்கே அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.

Related Stories: