சென்னை: சென்னை கடலோர பகுதியில் மாசு அளவை கண்காணிக்க நங்கூரமிடப்பட்டிருந்த பிளாஸ்டிக் மிதவையை இந்திய கடற்படையின் ரோந்து படகு சேதப்படுத்தியுள்ளது. சென்னை கடலோர பகுதியில் கடல்நீரில் கலந்துள்ள மாசு அளவு, மற்றும் நீரின் தரத்தை கண்காணிக்க தேசிய கடல்சார் மையம் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான மிதவை ஒன்றை கடற்கரை ஓரத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் நங்கூரமிட்டிருந்தது. மேலும் இந்த சோதனை திட்டத்திற்காக மத்திய அரசு நிதி வழங்கி இருந்த நிலையில் திட்டத்தை இன்று முறையே துவக்கி வைக்க புவியியல் அமைச்சகம் முடிவு செய்திருந்தது.
இந்நிலையில் படகு ஒன்றில் அமைந்திருந்தபடி ஆராய்ச்சியாளர்கள் மிதவையை ஆய்வு செய்த போது அங்கு ரோந்து படகில் வந்த கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி மிதவையை சேதப்படுத்தி சென்றனர். இதையடுத்து இந்த மிதவையில் பொருத்தப்பட்டிருந்த சென்சார்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கும் ஆராய்ச்சிமையத்தின் அதிகாரிகள் மிதவையின் மீது இந்திய அரசின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தும் அதுகுறித்து விசாரிக்காமல் கடற்படையினர் சேதப்படுத்தி சென்றதாக வருத்தம் தெரிவித்தனர்.