பெரம்பூர்: குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்துவிட்டு தலைமறைவான மாநகராட்சி பெண் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.பள்ளிக்கரணை விவேகானந்தா நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயன் (58). இவர், அன்னை கஸ்தூரிபாய் கட்டுமான தொழிலாளர் அமைப்பு சாரா சங்க தலைவர். இவருக்கு, கடந்த 2016ம் ஆண்டு கொருக்குப்பேட்டையை சேர்ந்த சென்னை மாநகராட்சி ஊழியர் மஞ்சுளா (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது மஞ்சுளா, “எனக்கு குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை நன்கு தெரியும். குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் யாருக்கேனும் வீடு தேவைப்பட்டால் என்னிடம் சொல்லுங்கள். குறைந்த விலையில் வாங்கி தருகிறேன்,” என்று விஜயனிடம் கூறியுள்ளார். இதை நம்பிய விஜயன், தனது சங்க உறுப்பினர்கள் மற்றும் பலரிடம் ₹30 லட்சம் வரை பெற்று மஞ்சுளாவிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய மஞ்சுளா, யாருக்கும் வீடு வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால், பணம் கொடுத்தவர்கள் அதை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.