அந்தமான், சீனாவில் நிலநடுக்கம்: ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை

டோக்கியோ: ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு ஜப்பானில் மாமகட்டாவுக்கு அப்பால் நடுக்கடலில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. ஹென்சு தீவில் இருந்து 85 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து யாமகட்டா, நிகடா, இஷிகாவா ஆகிய நகரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள இபின் என்னும் நகரில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10.55 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கம், சிச்சுவானில் 16கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 5.3 அளவிலான நிலநடுக்கம் சிசுவான் மாகாணத்தை மீண்டும் தாக்கியது. அடுத்தடுத்த நில அதிர்வுகளால் கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 122 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து, அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை 3.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.9 அலகாக பதிவாகியுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளிலிருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் காணப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும் நிலநடுக்கத்தால் குடியிருப்புகள், கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.  

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும் நிலநடுக்கத்தால் குடியிருப்புகள், கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். அந்தமான், சீனாவை தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: