சென்னை: மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு, போட்டித்தேர்வு மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையே, நீண்ட நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மற்றொருபுறம் பணம் சம்பாதிக்க துடிக்கும் சிலர், இந்த அறிவிப்புகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தங்களை பெரிய அரசியல்வாதியாகவும், பல இடங்களில் தொடர்பு இருப்பதுபோலவும் அடையாளப்படுத்திக்கொண்டு, வேலைக்கு தயாராகி வருவோரிடம் ஆசைவார்த்தை கூறி பணம் பறித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இவர்களை நம்பி பணம் கொடுத்தவர்கள் வேலை கிடைக்காமலும், பணமும் திரும்ப பெற முடியாமலும் தவித்து வருகின்றனர்.ஒருகட்டத்தில், ஆங்காங்குள்ள போலீஸ் ஸ்டேஷன்கள், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகங்களிலும் புகார் அளித்து வருவது தொடர்கதையாக இருக்கிறது. இவ்வாறு பலரும் ஏமாறுவதை தடுப்பதற்காக அரசு வேலைவாய்ப்புக்கு அறிவிப்பு வெளியிடும் போது அதற்கு மேலே யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என குறிப்பிடப்பட்டு வருகிறது. அப்படியிருந்தும் சிலர் இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்.