ரவுடி சுட்டுக்கொலை செய்த விவகாரம் உள்துறை முதன்மை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: சென்னையில் ரவுடியை சுட்டுக் கொலை செய்த விவகாரத்தில் உள்துறை முதன்மை செயலாளர் மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு டி.ஜி.பி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் மாநில  மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி வல்லரசு மீது கொலை, கொள்ளை என பல்வேறு வழக்குகள் இருந்தன. இந்நிலையில், கடந்த 15ம் தேதி மாதவரம் பஸ் நிலையம் அருகே போலீசார் அவரை கைது செய்ய முயன்ற போது போலீசாரை  அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி சென்றபோதும் அரிவாளால் தாக்கியதையடுத்து அவரை போலீசார் என் கவுண்டர் மூலம் சுட்டுக்கொன்றனர்.

இதுதொடர்பாக பத்திரிகைகளில் நேற்று முன்தினம் செய்தி வெளிவந்தது. இதையடுத்து இந்த செய்தியை படித்து பார்த்த மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவி மீனாகுமாரி தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தார். பின்னர், நடந்த சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு டி.ஜி.பி. விசாரணை நடத்தி 8 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் 6 வாரத்துக்குள்  உரிய ஆவணங்களுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: