மதுரை:மதுரையைச் சேர்ந்த வெரோனிகா மேரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:மதுரையில் பெய்த கனமழையால் கடந்த மே 7ம் தேதி இரவு நகரின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. அப்போது மதுரை அரசு மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டர் பழுதடைந்திருந்ததால் இயங்கவில்லை. இதனால் அவசர சிகிச்சைப்பிரிவில் செயற்கை சுவாசம் பெற்று வந்த 5 பேர் உயிரிழந்தனர். எனவே, தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஜெனரேட்டர், வெண்டிலேட்டர் உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளை ஆய்வு செய்து, அவை முறையாக இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல், உத்தங்குடியைச் சேர்ந்த டாக்டர் குருசங்கர் தாக்கல் செய்த மனுவிலும் இந்த கருத்தை வலியுறுத்தி இருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர், ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சோமசுந்தரம், வக்கீல்கள் செந்தில், சுப்புராஜ் ஆகியோர் அடங்கிய சிறப்புக்குழுவை அமைத்தனர். இக்குழுவினர் ஐகோர்ட் கிளையின் எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களிலுள்ள ஏதேனும் இரு அரசு மருத்துவமனைகளுக்கு திடீர் ஆய்வுக்கு செல்ல வேண்டும். அங்கு, செயற்கை சுவாசம், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட கருவிகள் பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ேவண்டுமென உத்தரவிட்டனர்.