மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 491.28 புள்ளி சரிந்து 38,960.79 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 151.15 புள்ளிகள் குறைந்து 11,672.15 ஆக இருந்தது.
இந்த சரிவால், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு ₹2,00,272.82 கோடி சரிந்து ₹1,50,09,315.18 கோடியானது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் ஸ்டீல், அலுமினியம் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்ததற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அக்ரூட், பாதாம், ஆப்பிள், டியூப், பைப் பிட்டிங் உட்பட 29 பொருட்கள் மீதான வரியை மத்திய அரசு அதிகரித்தது. இதனால், இரு நாடுகளிடையே வர்த்தகப்போர் உருவாகலாம் என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் இருந்ததே பங்குச்சந்தை சரிவுக்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.