சென்னை விமான நிலையத்தில் புளுடூத் ஸ்பீக்கரில் கடத்திய ரூ.38 லட்சம் தங்கம் பறிமுதல்: பயணி கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் புளுடூத், ஸ்பீக்கரில் ₹38 லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கெட்களை கடத்திய பயணி கைது செய்யப்பட்டார். ரியாத்திலிருந்து சென்னைக்கு நேற்று காலை 5.30 மணிக்கு கல்ப் ஏர்ேவஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சாதிக் ஷேக் (22) என்பவர் ரியாத்திற்கு சுற்றுலா பயணியாக சென்று சென்னை திரும்பினார்.

சந்தேகத்தின் பேரில் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பயந்துகொண்டு அதிகாரிகளிடம், “நான் எதுவும் கடத்தி வரவில்லை. வேண்டும் என்றால் என்னுடைய சூட்கேசை சோதித்து கொள்ளுங்கள்” என்றார்.

இதனால் அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. அவரது சூட்கேஸ் மற்றும் கைப்பையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் தங்க கட்டிகள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் புளுடூத் ஸ்பீக்கர் பாக்ஸ் ஒன்று இருந்தது. அதனை அதிகாரிகள் வாங்கி சோதனை செய்தனர். அதில் 11 தங்க பிஸ்கட்கள் இருந்தது தெரியவந்தது. ஒவ்வொரு தங்க பிஸ்கட்டும் 100 கிராம் என மொத்தம் 1.1 கிலோ இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ₹38 லட்சம். இதனையடுத்து அந்த தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், சாதிக் ஷேக்கை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: