மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.8.5 லட்சம் கரன்சிகள் பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது

சென்னை: சென்னையில் இருந்து மலேசியாவுக்கு விமானம் மூலம் கடத்த முயன்ற ₹8.5 லட்சம் மதிப்புள்ள கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா விமானம் நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாராக இருந்தது. அதில், பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பினர். அப்போது, சென்னையை சேர்ந்த முஸ்தபா (27) மற்றும் ஹாஜா மொய்தீன் (24) ஆகிய இரண்டு பேர் சுற்றுலா பயணிகள் விசாவில் மலேசியா செல்ல வந்தனர். அவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டதில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் சந்தேகம் தீராத அதிகாரிகள், இரண்டு பேரையும் தனி அறைக்கு அழைத்து சென்று அவர்களது உடல் முழுவதும் பரிசோதித்தனர்.

அப்போது, அவர்களின் உள்ளாடைகளில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றின் இந்திய மதிப்பு ₹8.5 லட்சம். அவற்றை பறிமுதல் செய்தனர். பிறகு இருவரின் பயணத்தை ரத்து செய்து மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: