பெரம்பூர்: ஓட்டேரி அருகே வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தம்பதியின் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.ஓட்டேரி செல்லப்பா தெருவை சேர்ந்தவர் தன்ராஜ் (41). பால் வியாபாரி. இவருடைய மனைவி தீபா (36). இவர்களது மகன் லோகேஷ் (16), தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான். தன்ராஜிக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடித்து லோகேஷ் வீட்டுக்கு வந்தபோது, தாயும், தந்தையும் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினரிடம் கூறி அழுதான். தகவலறிந்து ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையால் இருவரும் சேர்ந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது மனைவியை அடித்து தூக்கில் தொங்கவிட்டு, அவரும் தூக்குப் போட்டுக் கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.