திருவொற்றியூர்: திருவொற்றியூரில் தொடர் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.திருவொற்றியூர் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அடிக்கடி மின் தடை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 2 மணி நேரம், 4 மணி நேரம் என தற்போது மின்வெட்டு நேரம் அதிகமாகி கொண்டே இருப்பதால் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து தவிக்கின்றனர். குறிப்பாக, முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் புழுக்கத்தால் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுபற்றி மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம், காலடிப்பேட்டை தேரடி போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. ஆனால், நீண்ட நேரமாகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அப்பகுதி மக்கள் மின் வாரிய அலுவலகத்தை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றனர்.