×

துவரங்குறிச்சி அருகே அடிக்கடி வனவிலங்குள் பலியாகும் மர்மம்: பயிர்களை சேதப்படுத்துவதால் கொல்லப்பட்டு புதைக்கப்படுகிறதா?

மணப்பாறை: துவரங்குறிச்சி அருகே பலியாகும் காட்டெருமைகளை உடற்கூறு பரிசோதனை செய்யாமலே வனவர்கள் புதைத்துவிடுவதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே தச்சமலை வனப்பகுதி உள்ளது. இங்கு  காட்டெருமைகள், மான்கள், குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன. தற்போது கடும் வறட்சியால்  தண்ணீர் தேடி காட்டெருமைகள் மலையைவிட்டு இறங்கி விவசாய நிலப்பகுதிக்கு படையெடுத்து வருகிறது.

 அப்படி வரும் விலங்குகள், திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில்  அடிப்பட்டு இறப்பது தொடர் கதையாக உள்ளது.  கடந்த 12ம் தேதி காட்டெருமை நெடுஞ்சாலையில் வாகனத்தில் அடிப்பட்டு இறந்தது. அதை வன அலுவலர்கள் கைப்பற்றி  போஸ்ட்மார்ட்டம் செய்யாமலேயே புதைத்து விட்டனர். மறுநாளும் ஒரு வயது ஆன பெண் காட்டெருமை வனத்துறை அலுவலகம் அருகே இறந்து கிடந்தது. தகவலறிந்த வனசரகர்கள் அதை கைப்பற்றி எப்படி இறந்தது என போஸ்ட்மார்ட்டம் செய்யாமலேயே வன அலுவலகம் அருகே சாலையோரத்திலே குழி தோண்டி புதைத்துவிட்டனர்.அதுதெரியாமல் இருக்க புதைத்த இடத்தின் மீது முட்களை வெட்டி வைத்துவிட்டனர்.

வனவிலங்குகள் சாலையில் அடிப்பட்டு தான் பலியாகிறதா அல்லது விவசாய நிலங்களுக்கு வரும்போது மின்வேலியில் சிக்கி பலியாகிறதா என தெரியவில்லை. மின்வேலியில் சிக்கி இறக்கும் காட்டெருமைகளை அப்பகுதியினர் விபத்தில் இறந்ததுபோல் காட்ட சாலையில் வீசிவிடுவதாகவும், இதற்கு வன ஊழியர்களும் உடந்தையாக இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுபற்றி வனபாதுகாப்பு படையினரிடம் புகார் கூறினாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.  இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Turanganichi , Tawangurichi, wildlife, kills
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...