அதிக அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் சீனா, பாகிஸ்தான் முதலிடம்: அதே நிலையில் தொடரும் இந்தியா!

ஸ்டாக்ஹோம்: அதிக அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் சீனா, பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. உலகளாவிய அளவில் அணு ஆயுத உற்பத்தி மற்றும் கையிருப்பு தொடர்பான கையேடுகளை இந்த அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அவ்வகையில், 2019ம் ஆண்டுக்கான கையேடு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த கையேட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விபரங்களின்படி பாகிஸ்தான், சீனா, வடகொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் அணுகுண்டுகள் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. அதாவது, கடந்தாண்டு 280 அணுகுண்டுகளை வைத்திருந்த சீனா இந்த ஆண்டில் 290 அணுகுண்டுகளை வைத்துள்ளது. கடந்த ஆண்டு 140-150 அணுகுண்டுகளை வைத்திருந்த பாகிஸ்தானின் கையிருப்பும் 160ஐ இப்போது எட்டியுள்ளது.

இஸ்ரேலிடம் உள்ள அணுகுண்டுகளின் எண்ணிக்கை 80ல் இருந்து 90 ஆகவும், கடந்தாண்டு 10-20 அணுகுண்டுகளை மட்டுமே வைத்திருந்த வடகொரியாவின் கையிருப்பு தற்போது 30 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்ட வகையில் இந்தியாவின் அணுகுண்டுகள் கையிருப்பு கடந்த 2018ம் ஆண்டில் இருந்த 130-140 என்ற அதே அளவில் இப்போதும் உள்ளது. கடந்தாண்டு நிலவரப்படி, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய 9 நாடுகள் ஒட்டுமொத்தமாக 14,465 அணுகுண்டுகளை வைத்திருந்தன. ஆனால், இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கையில் 600 குறைந்து, மேற்கண்ட நாடுகள் வைத்திருக்கும் அணுகுண்டுகளின் எண்ணிக்கை 13,865 ஆக உள்ளது. இவற்றில் 3,750 அணு ஆயுதங்கள் படைகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: