நியூயார்க்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் அயோவா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் டெஸ் மொய்னஸ் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் சுங்காரா(44). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் தனது மனைவி லாவண்யா சுங்காரா(41), 15 மற்றும் 10 வயதுடைய 2 மகன்களுடன் வசித்து வந்தார். பொதுமக்கள் பாதுகாப்பிற்கான தொழில்நுட்ப சேவைகள் பிரிவில் கடந்த 11 ஆண்டுகளாக சந்திரசேகர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்நாட்டு நேரப்படி சனிக்கிழமை இரவு இவர்கள் 4 பேரும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சந்திரசேகரின் வீட்டில் தங்கியிருந்த அவரது உறவினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினர்.