ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே பீடி கம்பெனியில் பீடி, பணத்தை திருடிய 5 வடமாநில பெண்கள் குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டனர். மேலும் அப்பகுதியில் பதுங்கியிருந்த 25 பேர் கும்பலை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பக்கிரிதக்கா குயில் மண்டி தெருவை சேர்ந்தவர் இலியாஸ்(39). அதே பகுதியில் 2 மாடி கட்டிடத்தில் பீடி கம்பெனி, அலுவலகம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் பீடி கம்பெனி அலுவலகத்தை பூட்டிவிட்டு சாப்பிட சென்றார். அப்போது, அங்கு 2 குழந்தைகளுடன் அமர்ந்திருந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 பெண்கள் திடீரென பீடி கம்பெனி அலுவலக ஷட்டரை கள்ளச்சாவி போட்டு திறந்தனர். பின்னர் உள்ளே நுழைந்த அவர்கள், கல்லாப்பெட்டியில் இருந்த ₹5300ஐ திருடியுள்ளனர். மேலும், அலுவலகத்தின் மாடிக்கு சென்ற அவர்கள் அங்கிருந்த ஷட்டரை திறந்து குழந்தையை உள்ளே நுழையவிட்டு பீடி பண்டல்களையும் திருடியுள்ளனர்.இதற்கிடையில் சாப்பிட்டு விட்டு அலுவலகம் திரும்பிய இலியாஸ், அலுவலக ஷட்டர் திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 5 பெண்கள் குழந்தைகளுடன் இருப்பதை கண்டு திடுக்கிட்டார். அவரை பார்த்தவுடன் அந்த பெண்கள் தப்பியோட முயன்றனர். உடனே பொதுமக்கள் உதவியுடன் அனைவரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். புகாரின்படி ஜோலார்பேட்டை போலீசார், 5 பெண்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள முன்காவாலி மாவட்டம் புராத்பூர் பகுதியை சேர்ந்த லகான் மனைவி நந்து(21), சான்தோஷ் மகள் பேபி(20), பாபுலால் மனைவி சாய்ராபாய்(55), அசோன் நகர் புத்தரா பகுதியை சேர்ந்த பாலு மகள் காஜல்(20), குணா மாவட்டம் அஜய் மனைவி குகனா(20) என்பதும் தெரியவந்தது.