அயோத்தி: ‘அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதற்கு, மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டும்,’ என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார். கடந்தாண்டு நவம்பரில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு வந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மக்களவை தேர்தலுக்கு பின்னர் மீண்டும் அயோத்திக்கு வருவேன் என்று தெரிவித்தார். மக்களவை தேர்தல் முடிந்த நிலையில், நேற்று அவர் அயோத்தி சென்றார்.
தனது மகன் ஆதித்யா மற்றும் புதிதாக தேர்வான 18 எம்பி.க்களுடன் ராமர் கோயிலுக்கு சென்று அவர் வழிபாடு நடத்தினார். பின்னர், உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், “அயோத்தி ராமர் கோயில் வழக்கு பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருக்கிறது. பிரதமர் மோடிக்கு தைரியம் இருக்கிறது. அரசு முடிவு எடுத்தால், அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. சிவசேனா மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்துக்களும் இதற்கு ஆதரவாக இருக்கின்றனர்’’ என்றார்.