மீனம்பாக்கம்: இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இலங்கையை சேர்ந்த குகப்பிரியா (31), சுபாஷினா (39), நாகேஸ்வரி (43), அஸ்ரா (41) ஆகிய 4 பெண்கள் ஒரு குழுவாக இலங்கைக்கு சுற்றுலா பயணியாக சென்று விட்டு சென்னைக்கு திரும்பி வந்தனர். இவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து சுங்க அதிகாரிகள் இவர்கள் வைத்திருந்த கைப்பைகளை சோதனையிட்டனர். அவற்றில் கொத்து, கொத்தாக தங்க செயின்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். அவைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் பெண் சுங்க அதிகாரிகள் மூலம் 4 பெண்களையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அப்போது, அவர்களது உள் ஆடைக்குள் தங்க கட்டிகள், தங்க வளையல்கள், கை செயின்கள் போன்றவைகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இந்த 4 பெண்களிடம் இருந்தும் மொத்தம் 1.4 கிலோ தங்க ெசயின்கள் மற்றும் தங்க கட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹45 லட்சம். இதையடுத்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.