திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணிடம் 40 சவரன் அபேஸ்: வாலிபர் கைது

அம்பத்தூர்:  ஆவடி அடுத்த பட்டாபிராம், அன்னை சத்யா நகர், பிளவர் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (34). அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், சுப்புலட்சுமி நகரை சேர்ந்தவர் பானுபிரியா (34). இவர்கள் அம்பத்தூரில் ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தொழில்நுட்பம் படித்தபோது நட்பு ஏற்பட்டு, காதலாக மாறியது.இந்நிலையில், பானுபிரியாவிடம், தனக்கு நிறைய கடன் உள்ளது. அதை அடைக்க முடியாமல் தவித்து வருகிறேன். கடன் தொகையை அடைக்க உதவி செய்தால் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ராதாகிருஷ்ணன் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய பானுபிரியா, சுமார் 40 பவுன் நகைகளை  ராதாகிருஷ்ணனிடம்  கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு பானுபிரியாவுடன் பழகுவதை குறைத்ததுடன், திருமண பேச்சை எடுத்தால் நைசாக  ராதா கிருஷ்ணன் நழுவிக்கொண்டார்.  

இந்த சூழ்நிலையில் வசதிபடைத்த மற்றொரு பெண்ணை ராதாகிருஷ்ணன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் தெரியவந்ததும் பானுபிரியா அதிர்ச்சியடைந்தார்.  ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது நகையைக் கொடு அல்லது நகைக்கான பணத்தை திரும்பக்கொடுக்கும்படி கேட்டுள்ளார். அப்போது அவர் பணத்தை தர மறுத்து, மிரட்டியதாக தெரிகிறது.இதுகுறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் பானுபிரிய புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து ராதாகிருஷ்ணனை நேற்று கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 25 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். இதுபோல், வேறு பெண்களை ஏமாற்றி நகைகளை பறித்திருக்கிறாரா என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories: