பெரம்பூர்: தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் அரசு புறநகர் மருத்துவமனை உள்ளது. இங்கு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை ஆகிய பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தினசரி சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். பலர் உள் நோயாளியாகவும் சிகிச்சை பெறுகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாட்டால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிப்பதற்கு மட்டுமின்றி கழிவறையிலும் தண்ணீர் இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். மருத்துவ சிகிச்சை மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.