சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பட்டியல், 19.3.2019 அன்று பல்கலைக்கழக இணையத்தில் வெளியிடப்பட்டது. மதுரையில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் முடிவுகள் எதையும் வெளியிடவே இல்லை. மாணவர்களுக்கும் எந்தத் தகவலும் அனுப்பவில்லை. ஆனால் அவர்களை, 13.5.2019 அன்று நடைபெற உள்ள கலந்தாய்வுக்கு வரும்படி, பல்கலைக்கழக நிர்வாகம் கடிதம் அனுப்பியது. நுழைவுத் தேர்வு எழுதிய சில மாணவர்களுக்கும் கடிதங்கள் அனுப்பியது. பெரும்பாலான கடிதங்கள் மாணவர்களுக்கு போய்ச் சேரவே இல்லை. இந்த விவரங்கள் எதுவும் தெரியாத மாணவர்கள் பலர், இன்னமும் பல்கலைக்கழகத்தின் வலைதளத்தையே பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.