சென்னை: நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கேங்மேன் பதவி குறித்து பயிற்சி புத்தகம் வெளியிட்டும், இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கான தேதியை கால நீட்டிப்பு செய்ய முயற்சி நடப்பதை கண்டித்தும், தொமுச சார்பில் மின்வாரியத்தின் மீது வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:மின்வாரியத்தில் ஒப்பந்தத்தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். பணி நிரந்தரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற பிறகும், தற்போது வரை நீதிமன்ற தீர்ப்பு மதிக்கப்படாமல் இருக்கிறது. புதிய டிரான்ஸ்பார்மர், மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட கள பணிகளை இவர்கள் தான் செய்கின்றனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் 7ம் தேதி திடீரென்று வரலாற்றில் இல்லாத கேங்மேன் என்ற 5,000 பதவியை உருவாக்கி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தொமுச தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 12ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது (ஸ்டேடஸ் கோ) தற்போதைய நிலையே தொடர வேண்டும். வாரியத்தில் புதிய பணிநியமனம் தொடர்பாக எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு போன்ற எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்ககூடாது. வழக்கை டிவிஷன் பெஞ்சிற்கு மாற்றியும் உத்தரவிடப்பட்டது.