சென்னை: தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் உள்ள பூங்காக்களுக்கு 2 நாளுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் அம்மா உணவகங்களை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. விடுதிகளை பூட்டும் அளவுக்கும், வீடுகளை காலி செய்யும் அளவுக்கும் தண்ணீர் பஞ்சம் இருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 637 பூங்காக்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு ீபூங்கா பராமரிப்பிற்கு ஒரு ஹெக்டேர் பரப்பளவு கொண்டு இருந்தால் நாள் ஒன்றுக்கு 800 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.இதன்படி பார்த்தால் சென்னை மாநகராட்சியில் உள்ள 637 பூங்காவிற்கு நாள் ஒன்று 5 லட்சம் லிட்டர் தண்ணீர் வேண்டும். இந்த தண்ணீர் ஆழ்துளை கிணறுகள் மற்றும் லாரிகள் மூலம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பூங்காவிற்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யும் நிலை உருவாகியுள்ளது.