போதை, ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் இல்லை: பங்க் உரிமையாளர்கள் அதிரடி

சென்னை: பெரியபாளையத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் போலீசார் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் போதை மற்றும் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் விற்பனை இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை அடுத்த பெரியபாளையத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் போலீசாரின் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் தலைமை தாங்கினார். பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் மதியழகன்,  வெங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் முன்னிலை வகித்தனர்.ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, வெங்கல், பென்னலூர் பேட்டை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் உள்ளன. இதில் பைக்குகளில் பெட்ரோல் போட வரும் நபர்களிடம் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்த வேண்டும் என போலீசார் தெரிவித்தனர். இதை கேட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறியதாவது: வரும் 20ம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வரவேண்டும். அப்படி ஹெல்மெட் அணியாமல் வந்தால் அவர்களுக்கு பெட்ரோல் வழங்க மாட்டோம்.

அதேபோல் லைசென்ஸ் இல்லாமல் வந்தாலும், குடித்து விட்டு வந்தாலும் பெட்ரோல் போட மாட்டோம். ஹெல்மெட் கட்டாயம் குறித்து ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் பேனர்கள் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த போகிறோம். இவ்வாறு  போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.பின்னர் கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த  பங்க் உரிமையாளர்கள், ‘ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து 3 தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். இதை நடைமுறைப்படுத்த நீதிமன்றத்தின் மூலம் வழக்கு பதிய வேண்டும்’ என்றனர்.  இக்கூட்டத்தில் சப் - இன்ஸ்பெக்டர்கள் மனோஜ்குமார், தாஸ், கிருஷ்ணராஜ், கோவிந்தன், ராம மூர்த்தி, ராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: