×

நாடு முழுவதும் நாளை டாக்டர்கள் ஸ்டிரைக்: மேற்குவங்க மருத்துவர்கள் மீது ‘எஸ்மா’ பாயுமா?...மம்தா பானர்ஜி எச்சரிக்கை

கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவர்கள் மீதான தாக்குதலை  தொடர்ந்து நாளை நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில்  ஈடுபடுகின்றனர். போராட்டம் முடிவுக்கு வராததால் மருத்துவர்கள்மீது எஸ்மா சட்டம் பாய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருந்தும், முதல்வர்  எச்சரிக்கையுடன் ‘எஸ்மா பாயாது’ என்று தெரிவித்துள்ளார்.கடந்த 10ம் தேதியன்று மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா என்ஆர்எஸ் மருத்துவ   கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் மீது உயிரிழந்த நோயாளி  ஒருவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியதில் 2 டாக்டர்கள் படுகாயம்  அடைந்ததை  அடுத்து அம்மாநிலத்தில் டாக்டர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.  மருத்துவர்களின் போராட்டம் இன்று 6வது நாளாக  தொடர்கிறது. இதனால் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு போராட்டத்திற்கு காரணம்  மம்தா பானர்ஜி தான்  காரணம் என்று குற்றம் சாட்டுகிறது.

ஆனால், ‘நாங்கள் பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளோம். ஆனால் அரசாங்கம்தான் எந்தவித முன்னெடுப்பும் எடுக்கவில்லை’ என்று இளநிலை  மருத்துவர்கள் சங்கத்தினர் கூறினர். தொடர்ந்து, மருத்துவர் சங்கத்தினர் முதல்வர் மம்தா பானர்ஜியுடனான சந்திப்பை புறக்கணித்து வருகின்றனர்.  அவர்கள், மம்தா பானர்ஜி என்.ஆர்.எஸ் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மருத்துவர்களை சந்தித்து குறைகளை தீர்க்குமாறு கேட்டுக்  கொண்டுள்ளனர். இதற்கிடையே, கொல்கத்தா, டார்ஜிலிங், புர்துவான் உள்ளிட்ட மருத்துவ கல்லூரிகளின்  துறை தலைவர்கள் உள்ளிட்ட 700க்கும்  மேற்பட்ட டாக்டர்கள் இதுவரை ராஜினாமா  செய்துள்ளனர். அவர்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தை மேற்குவங்க மருத்துவக்  கல்லூரி  இயக்குனருக்கு அனுப்பி வைத்துள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனை  மருத்துவர்களின் அமைப்பும் மருத்துவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு  தெரிவித்துள்ளது.

மத்திய நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்ட அறிக்கையில்,  ‘மருத்துவர்கள் போராட்டத்தை கவுரவ  பிரச்னையாக்காதீர்கள்;  மாநிலத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டசபையில் தனியாக சட்டம் இயற்றுங்கள்’ என்று மம்தா பானர்ஜிக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மேலும், மருத்துவர்களின் இன்றைய பிரச்னையை தீர்க்க உடனடியாக அவர்களை அழைத்து பேசும்படியும் கேட்டுக்  கொண்டுள்ளார். இதற்கிடையே, மாநில சட்டம் ஒழுங்கு குறித்து தலைமை செயலாளரிடம் மத்திய உள்துறை சார்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக மருத்துவர்களுடனான சந்திப்பை நிராகரித்த முதல்வர் மம்தா பானர்ஜி, பத்திரிகையாளர்கள்  சந்திப்பு ஒன்றில், ‘‘டாக்டர்கள் மீது எஸ்மா போன்ற கடுமையான சட்டங்களைப் பயன்படுத்த முடியும் என்றாலும் பயன்படுத்த விரும்பவில்லை;  அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிடக் கோரி மேற்குவங்க கவர்னர் திரிபாதியும் வேண்டுகோள் விடுத்தார். இருந்தும், மேற்குவங்கத்தில்  இன்றும் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது. அதேநேரத்தில் மருத்துவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக  அறிவித்த மம்தா பானர்ஜி, அவர்களை சமாதானப்படுத்த அமைச்சர்கள் குழுவை அனுப்பி வைத்தார். ஆனாலும் மம்தாவின் கோரிக்கையை  நிராகரித்துள்ள மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்கின்றனர். இந்நிலையில், நாளை நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தின்  சார்பில் மேற்குவங்க மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஒருநாள் அடையாள போராட்டம் நடக்கிறது. இதற்கு பெரும்பாலான  மருத்துவர்கள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Tags : Doctors ,Country , Country, Doctors Strike, West Side Doctors, Esma, Mamta Banerjee
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை