×

அதிமுக கூட்டத்தில் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பு, வாக்காளர்களுக்கு நன்றி உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் தொடங்கிய கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. இந்த கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள்

* அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கும், கழகத்தின் தலைமையில் அமைந்த கூட்டணியின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த தமிழக வாக்காள பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

* நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காகவும், சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் அரும்பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும்; தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும்; தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும் இந்தக் கூட்டம் மனமார்ந்த நன்றி

* நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசத்தின் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அளித்தமைக்கு இந்தக் கூட்டம் தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறது.

* தமிழ் நாட்டில் விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சிறப்புடன் பணியாற்றி, இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையில் பெற்றதைப் போன்ற மகத்தான வெற்றியைப் பெற்றிட இந்தக் கூட்டம் உறுதி ஏற்கிறது.  உள்ளாட்சி மன்றத் தேர்தல் பணிகளை உடனடியாகத் தொடங்கி மக்கள் மனங்களை வென்றெடுக்க இந்தக் கூட்டம் சூளுரைக்கிறது.  

* தமிழ் நாட்டின் தன்னிகரில்லா மக்கள் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வகுத்துத் தந்த ஏழை, எளியோருக்கும், தாய்க்குலத்திற்கும் தொண்டாற்றும் தூய அரசியல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு, தமிழக மக்கள் எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ்ந்திடும் வண்ணம் செயல்படவும் இந்தக் கூட்டம் உறுதி ஏற்கிறது.  

செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க தடை

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களுக்கு எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.  மறு அறிவிப்பு வரும்வரை எந்த ஒரு கருத்தையும் ஊடகங்களில் தெரிவிக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார்...

இது தேர்தலுக்கு பின் நடக்கக்கூடிய வழக்கமான கூட்டம் தான் என்றும் பிரச்சினை ஏதும் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து அதிமுக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்சனையே இல்லை, அதுகுறித்து கூட்டத்தில் எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தேர்தல் முடிவுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு பற்றி முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் முடிவு எடுப்பார் என்று அவர் தெரிவித்தார். தற்போதைய கட்சி தலைமையே சிறப்பாக செயல்படுவதாக கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்து தெரிவித்தாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

மதுசூதனன் வலியுறுத்தல்


தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது குறித்து அமைச்சர்களின் கருத்தை கேட்டால் மட்டும் போதாது என்றும், கட்சி தொண்டர்களின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


Tags : voters ,meeting ,AIADMK , AIADMK, District Secretaries Meeting, Royapettah, General Secretary, Edattadi Palinasamy, Posters, O.Panniriselvam
× RELATED வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய...