பாட்னா: வயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு சிறை தண்டனை வழங்கும் சட்ட மசோதாவுக்கு பீகார் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியால் குடும்ப வாழ்க்கை முறையானது தற்போது மெல்ல மெல்ல சிதைந்து வருகிறது. திருமணம் ஆனவுடன் பெற்றோரை விட்டு பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் மனப்போக்கு மக்களிடையே அதிகரித்துள்ளது. சிலர் தங்களின் பெற்றோர்களுக்கு அடிப்படை தேவைகளை கூட செய்யாமல், அனாதைகளாக தவிக்க விடுகின்றனர். வயதான பெற்றோரை பராமரிக்காமல் பிள்ளைகளே கைவிடுவதால், நாடு முழுவதும் முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றது. இவ்வாறு வயதான பெற்றோரை முறையாக கவனிக்காமல் கைவிடும் மகன்கள் மற்றும் மகள்களுக்கு, சிறை தண்டனை வழங்குவதற்கு பீகார் அரசு முடிவு செய்துள்ளது.