ஜூன் 1 உலக பால் தினம் பால் இல்லாமல் நாமில்லை

பால்... மனிதனின் முதல் உணவு என்று கூறலாமா? தாய்ப்பால் வழி தொடரும் இந்த திரவ உணவு, பின்னர் மாட்டுப்பால் மூலமாக நமக்கு கிடைக்கிறது. உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. ‘‘தாயில்லாமல் நானில்லை...’’ என்று பாடுவதை விட ‘‘பால் இல்லாமல் நாமில்லை’’ என்று கூறலாம். அந்தளவுக்கு நம்மோடு பால் இணைந்திருக்கிறது. ‘பால் பக்கம் நான் எட்டிக்கூட பார்ப்பதில்லை’ என்று நீங்கள் தப்பிக்கவே முடியாது.

டீ, காபி, தயிர், மோர், பால்கோவா, கேக், மில்க்‌ஷேக், வெண்ணெய், நெய், பிரட், பிஸ்கட், சில வகை மருந்து வகைகள் என பால் பலவிதங்களில் நம்மோடு பின்னி பிணைந்திருப்பதை யாராலும் தடுக்கவே முடியாது. இப்படி பாலின் தேவை, அவசியம், கட்டாயத்தை உணர்ந்த ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதியை உலக பால் தினமாக, கடந்த 2001 முதல் கடைப்பிடித்து வருகிறது. ஆம்... பால் தினத்துக்கு இன்றுடன் வயது 18.

கொண்டாடுறதுக்கு அவசியமானது தான் என்றாலும், பாலை தவிர்த்து வாழ முடியாதா? வாழக்கூடாதா என்று கேள்விகள் எழும். பாலில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று நீங்கள் தெரிந்துக்கொண்டால் கூடுதல் பால் குடிக்கக்கூட நீங்கள் வருவீர்கள்.

பொதுவாக, நாம் குடிக்க பசும்பாலையே அதிகம் பயன்படுத்துகிறோம். பொதுவாக, பால் எளிதில் ஜீரணிக்கும் தன்மையுடையது. வெறும் பாலில் கால்சியம், லாக்டோஸ், போலிக் அமிலம், பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இவைகள் வயிற்றுப்புண்ணை ஆற்ற வல்லவை. உடலில் கால்சியம் சத்து குறைபவர்கள், ஒரு நாளைக்கு அரை லிட்டர் அளவு சுட வைத்த பாலை பருகி வரலாம். பல், எலும்புகளை வலுப்படுத்தும் சக்தி பாலுக்கு உண்டு.

சிலர் பச்சையாக பாலை குடிப்பார்கள். இது சிலருக்கு சேராது.

சுட வைத்து ஆற விட்டு குடிப்பதே சிறந்தது. 2வது கொதி வரும்போது பாலை இறக்கி விட வேண்டும். இல்லாவிட்டால் பாலில் உள்ள சத்துக்களின் வீரியம் குறைய ஆரம்பிக்கும். கலோரியும் அதிகமில்லை. கடையில் சென்று மோர், தயிர் வாங்கி சாப்பிடுவதை விட, கூடுலாக பால் வாங்கி மோர் தயாரித்தல் நல்லது. இது உணவு செரிமாணத்தை சீராக்கும். உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. வீட்டுப்பசு நெய்யை அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தி குழந்தைகளுக்கு கொடுத்து வருவது நல்லது. இதன்மூலம் குழந்தைகள் உடல் வலு கூடும். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வீட்டில் விற்கப்படும் அல்லது அரசு, தனியாரிடம் இருந்து பெறப்படும் பாக்கெட் பாலாக இருந்தாலும் சரி.. நீண்ட நேரம் பிரிட்ஜில் வைத்து காய்ச்சக்கூடாது. உடனே காய்ச்சத் தொடங்க வேண்டும். காலையில் குடித்து விட்டு மாலை வரை வைத்திருக்காமல், மீண்டும் லேசாக சூடு செய்து வைக்கவும். இதன்மூலம் பால் மாலை வரை கெடாமல் இருக்கும். குழந்தைகளுக்கு இரவு உணவு முடிந்ததும், பால் கொடுத்து உறங்கச்செய்வது மிகவும் நல்லது.

Related Stories: