×

மகளின் திருமண விழா மேடையில் மாரடைப்பால் இறந்த எஸ்.ஐ.

திருவனந்தபுரம்: மகளின் திருமண விழாவில் கச்சேரி மேடையில் பாடிக் கொண்டிருந்த தந்தை மாரடைப்பால் காலமானார். இதுகுறித்து மகளுக்கு தெரிவிக்காமல் திருமணம் நடைபெற்றது. பின்னர் தகவலறிந்து ஓடோடி வந்த மகள் தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்கியது. கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரையை சேர்ந்தவர் விஷ்ணுபிரசாத் (55). திருவனந்தபுரம் கரமனை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர். இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இளைய மகள் ஆர்ஷாவுக்கும், கொல்லம் கடைகல் பகுதியை சேர்ந்த விஷ்ணுபிரசாத் என்பவருக்கும் நேற்று கொல்லத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.

திருமணத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அங்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் இன்னிசை கச்சேரியும் நடந்தது. அப்போது மகளின் திருமண ஏற்பாட்டில் மகிழ்ச்சியாக இருந்த விஷ்ணுபிரசாத் இன்னிசை குழுவினருடன் சேர்ந்து மேடையில் ஒரு பாடல் பாடினார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மேடையில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போகும் வழியில் அவர் இறந்தார். அவரது உடல் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. திட்டமிட்டபடி திருமண நிகழ்ச்சி நடத்தி முடிக்க நினைத்த உறவினர்கள் இது குறித்து மணமகள் ஆர்ஷாவுக்கு தெரிவிக்கவில்லை. மேலும் ஒரு சில முக்கிய உறவினர்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி விஷ்ணுபிரசாத்-ஆர்ஷா திருமணம் நேற்று விமரிசையாக நடந்தது.

மணமகளின் தந்தை இறந்ததை தெரிந்தவர்கள் திருமணத்தால் உற்சாகமடைய முடியாமலும், துக்கத்தை வெளிப்படுத்த முடியாமலும் தவித்தனர். நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் ஆர்ஷாவை கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் மணவீடு சோகமயமானது. இன்று மாலை விஷ்ணுபிரசாத்தின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளளனர். தந்தை இறந்ததை அறிந்து மகள் ஓடோடி வந்து கதறி அழுதது உறவினர்கள் நெஞ்சை உருக்கியது.

Tags : wedding ceremony , Daughter's wedding ceremony, heart attack, SI
× RELATED பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி...