பறவைகள் தங்கியிருந்த மரம் அனுமதியின்றி வெட்டி அகற்றம்... வசிப்பிடமின்றி அலைமோதும் பறவைகளால் மக்கள் வேதனை

பேராவூரணி: பேராவூரணி அருகே குளத்தில், பறவைகள் தங்குமிடமாக இருந்த மரத்தை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தஞ்சை கலெக்டருக்கு செருவாவிடுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி ஒன்றியம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு ஊராட்சியில், சங்கிலி குளம் உள்ளது . இதன் பரப்பளவு சுமார் 15 ஏக்கர் ஆகும். செருவாவிடுதி தெற்கு ஊராட்சியின் முக்கிய நீர் ஆதாரமாக இந்த குளம் இருப்பதால் குளத்தினை கடந்த 2 ஆண்டுகளாக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து, பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரியதுடன், நீரையும் சேமித்து பராமரிப்பு செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் செருவாவிடுதி பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. இதனால் அந்த மரங்களில் வசித்து வந்த பறவைகள் தங்களுக்கான வசிப்பிடமின்றி அங்கும் இங்குமாக மரங்களை தேடி அலைந்து திரிந்த நிலையில் சங்கிலி குளத்தில் போதிய அளவு தண்ணீர் வசதி இருந்ததால், குளத்தில் இருந்த ஒரு பழமையான நாட்டுக் கருவேல மரத்தில் பல விதமான பறவையினங்கள் இரவு நேரங்களில் வந்து தங்கி செல்ல தொடங்கின.

இந்நிலையில், கஜா புயலினை தொடர்ந்து , கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செருவாவிடுதி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர் நிலை ஆதாரங்களில் காய்ந்து போன மரங்களை வெட்டுவதற்காக பேராவூரணி பொதுப்பணித்துறை அதிகாரிகளால் ஏலம் விடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த ஒருவர் காய்ந்து போன மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதற்கான அனுமதியினை பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது ஊழியர்கள் பலர் செருவாவிடுதி பகுதியில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் தற்சமயம் ஈடுபட்டு வருகின்றனர். செருவாவிடுதி சங்கிலி குளத்தில் இருந்த (பறவைகள் தங்கியிருந்த) நாட்டு கருவேல மரத்தினையும் ஊழியர்கள் வெட்டிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த செருவாவிடுதி கிராம மக்கள் தஞ்சை கலெக்டருக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது ஏலம் விடாத சங்கிலிகுளம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள பட்டுப்போகாத பல மரங்களையும், அனுமதியின்றி ஏலம் எடுத்தவர்கள் வெட்டியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மரங்களை அனுமதி இன்றி வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேராவூரணி பொதுப்பணித்துறை அலுவலர் உத்தரவின் பேரில், ஊழியர் ராமன் என்பவரும் , செருவாவிடுதி கிராம மக்கள் சார்பிலும், திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மரத்தினை வெட்டியது அறியாமல் வழக்கம்போல தங்குமிடத்திற்கு வந்த பறவைைகள், தங்கள் வாழ்விடமான கருவேல மரங்கள் வெட்டப்பட்டு, தங்களது கூடுகள் சிதைக்கப்பட்டு கிடந்ததை கண்டு, அதிர்ச்சி அடைந்து கீச்சிட்டு குரல் எழுப்பியவாறு, அந்த இடத்தையே சுற்றிச் சுற்றி வருவது பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவரழைக்கும் நிலையில் உள்ளது.

Related Stories: