திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு தலைதூக்க ஆரம்பித்துள்ளது. மக்காத பிளாஸ்டிக் எனப்படும் கேரி பேக்குகள், டீ கப்புகள், கடைகளில் பொருட்களை வைத்து கொடுக்க பயன்படுத்தும் பைகளுக்கு கடந்த ஜனவரி 1 முதல் தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆங்காங்கே அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து சில நாட்கள் பிளாஸ்டிக் பைகளை அப்புறப்படுத்தினர். அதன்பின் அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து தனிகுழுக்கள் அமைத்து கடந்து சில மாதமாக வணிக நிறுவனங்கள், உணவகங்கள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த ஆய்வில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் டன் கணக்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நேற்று திருப்பூர், பெருமாநல்லூர் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் சுமார் 300 கிலோ அளவு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.