ஈரோடு: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் ஈரோடு திண்டலில் உள்ள ஓட்டலில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:எங்கள் கட்சி சார்பில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளோம். மக்களவையில் முதல்முறையாக எங்கள் கட்சி எம்பியை உருவாக்கி உள்ளோம். அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.தமிழக மக்கள் தெளிவான நல்ல தீர்ப்பை அளித்துள்ளனர். கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை இம்முறை மக்கள் திமுக கூட்டணிக்கு நல்ல வித்தியாசமான தீர்ப்பை தந்துள்ளனர். இந்தியா முழுவதும் பாஜகவிற்கான அலை இருந்தாலும் தமிழகத்தில் தமிழக அரசுக்கு எதிரான அலை உருவாகி உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான அலை இருந்ததால்தான் தற்போது நடந்த தேர்தலில் மோசமான தோல்வியை அவர்கள் கண்டுள்ளனர்.
பாமக ராமதாஸ், அன்புமணி இருவரும் முதல்வரையும், அவரது அமைச்சர்களையும் கேவலமாக பேசி விட்டு அவர்களோடு கூட்டணி அமைத்து கொண்டனர். தற்போது தேர்தல் மூலம் மகக்ள் நல்ல தீர்ப்பு வழங்கி உள்ளனர்.சென்ற முறை சென்ற எம்பிக்களால் தமிழகத்திற்கு எந்த பிரயோஜனமும் இல்லை. ஆனால், இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்பிக்கள் திறமைசாலிகள், அனுபவசாலிகள். மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய திட்டங்களை பெற்றுக் கொடுப்பார்கள்.தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.