மழைநீர் வீணாவதை கண்டு வேதனை அடைந்த நாட்கள் உண்டு. அதன் பின் தான், சிலரின் ஆலோசனையின் பேரில் ஒரு முடிவுக்கு வந்தேன். அதன் பலன் தான் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்கியது. இந்த மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை நான் 25 ஆண்டுகளுக்கு முன்பே அமைத்தேன். அதன் பிறகு தான் தமிழக அரசே அதன் அவசியத்தை உணர்ந்தது. நான் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்ததற்கு முக்கிய காரணம் தண்ணீர் என்பது இயற்கையின் கொடை என்று எண்ணியது தான். அதை நாம் வீணாக்குவதை விட சேமித்து வைக்கலாமே என்று யோசித்தேன். கடந்த காலங்களில் வீடுகளில் தண்ணீர் பாத்திரத்தை பிடித்து தேக்கி வைப்பார்கள். அதே போன்று, நாம் ஏன் செய்யக்கூடாது. எனது வீடுகளில் மொட்டை மாடி இருக்கிறது. அதன்வழியாக நான் மழை நீரை பைப் மூலம் கொண்டு வந்துள்ளேன். அவ்வாறு வரும் நீரை அழுக்கு வராமல் இருக்க நான் பில்டர் செய்ய ஏற்பாடு செய்துள்ளேன். அதாவது மணல், கூழாங்கற்கள் என்று மூன்று அடுக்குகளாக வைத்து உருவாக்கி, அந்த இடத்தில் அந்த தண்ணீரை பில்டர் செய்தேன். இதன்பின் குழாய் மூலம் அந்த மழை நீரை தொட்டியில் சேமித்தேன்; இந்த தண்ணீர் அப்படியே கண்ணாடி போல பளீச் என்று இருக்கும். சுவையாகவும் இருக்கும். டம்ளரில் எடுத்து அப்படியே குடிக்கலாம். அந்த சுத்தமான தண்ணீரை தொடர்ந்து பிடித்து வைப்பேன். மீதமுள்ள தண்ணீரை கிணற்றில் விட்டுவிடுவேன். ஒரு மழைக்கு 50 முதல் 60 லிட்டர் தண்ணீர் வரை கிடைக்கும். கடந்த வருடம் சரியாக மழை இல்லை. நான் 25 வருடமாக இந்த மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு வைத்தல் இப்போது வரை எங்கள் வீட்டில் உள்ள கிணற்றில் தண்ணீர் மட்டம் குறையவே இல்லை.