×

தோல்விகளைக் கண்டு துவள வேண்டாம் மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்: ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம்

சென்னை: தோல்விகளைக் கண்டு துவள வேண்டாம், மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்று ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடித்தில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் உங்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மிகவும் நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவுகள், அதற்கு  முற்றிலும் மாறாக அமையும் போது  ஏமாற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்று தான். நம்மால் நேசிக்கப்படும்  ஒருவருக்கு இழப்பு ஏற்படும் போது எவ்வாறு நமக்கு ஏமாற்றம் ஏற்படுமோ, அதுபோன்றது தான் இதுவும். தேர்தல் முடிவுகள் எனக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தின. தேர்தல்  முடிவுகள் ஏமாற்றத்தை மட்டும் தான் ஏற்படுத்தினவே தவிர, எனக்குள் எந்தவித கவலையையோ,  கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. அதற்குக் காரணம் பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் தான். நீங்கள் மட்டும் தான்.பாமக போட்டியிட்ட 7  தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாமல் போனது பின்னடைவு தானே என்ற எண்ணம் உங்களுக்கு எழலாம். அது பின்னடைவு தான்.

ஆனால், அதற்கு காரணங்கள் உள்ளன. மக்களவைத் தேர்தலில் நாம் தோல்வியடைந்தாலும், கிட்டத்தட்ட கடந்த தேர்தலில் பெற்ற அளவுக்கு இப்போதும் வாக்குகளை வென்றுள்ளோம். இந்தத் தேர்தலின் முடிவுகள் குறித்து ஆத்ம பரிசோதனை  செய்வோம்; நம்மை நாமே மேலும் வலுப்படுத்திக் கொண்டு மீண்டும் களத்திற்கு செல்வோம் வெற்றி பெறுவோம். கடந்த தேர்தல்களில் வெற்றிகளைக் குவித்த அளவுக்கு தோல்விகளையும் பரிசாகப் பெற்றுள்ளோம். அப்போதெல்லாம் முடங்கி  விடாமல் பாட்டாளிகளாகிய உங்களின் உழைப்பால் மீண்டெழுந்து வந்திருக்கிறோம். இப்போதும் உங்களின் உதவியுடன் அது சாத்தியம் தான். ஆகவே, தோல்விகளைக் கண்டு துவள வேண்டாம். பாட்டாளிகளாகிய நீங்கள் வீறு கொண்டு  எழுந்தால் இனி வரும் தேர்தல்களில் வெற்றி நமதே. கடந்த காலங்களைப் போலவே மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவோம். அவர்களின் கரங்களாலேயே மகுடம் சூடுவோம். கவலை வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Tags : volunteers ,Ramadoss , bother , fail,fight, Ramadoss volunteers
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...