சென்னை: சட்டமன்ற இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களில் 5 மாஜி எம்.எல்.ஏக்கள் அதிமுகவுடன் இணைவதற்கு ரகசியமாக பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒன்றை ஆரம்பித்தார். இதை கட்சியாக பதிவு செய்து 39 நாடாளுமன்ற மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு போட்டியிட்டனர். இதில், 18 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 பேர் மறுபடியும் அவர்களுடைய தொகுதிகளிலேயே போட்டியிட்டனர். தங்கதமிழ்செல்வன் உட்பட 3 பேர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். முன்னதாக, ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தினகரன், அதே போல் மற்ற இடைத்தேர்தல்களிலும் வெற்றிபெற்று விடலாம் என்று கணித்திருந்தார்.ஆனால்அது பொய்த்துபோனது. நாடாளுமன்ற தேர்தல் மட்டும் அல்லாமல் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களும் மிக குறைந்த அளவிலேயே வாக்குகள் பெற்றிருந்தனர். பல இடங்களில் அமமுக 4வது இடத்திற்கு தள்ளப்பட்டது.