சென்னை: சுற்று சூழல் ஆர்வலர் முகிலன் மாயமாகி நேற்றுடன் நூறு நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் முகிலன் நட்புவட்டாரங்களில் தங்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன்(52). இவர் தமிழக பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு ெபற்றவர். தற்போது தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வருகிறார். இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று உரிய ஆவணங்களுடன் கடந்த பிப்ரவரி 14ம் தேதி சென்னையில் ஆவண படம் ஒன்று வெளியிட்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கி சூடு குறித்து ஆவணம் படம் வெளியிட்ட மறுநாளே அதாவது கடந்த பிப்ரவரி 15ம் தேதி இரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை செல்ல வந்தவர் திடீரென மாயமானார். சம்பவத்தன்று முகிலன் பச்சை கலர் முழுக்கை சட்டை, வெள்ளை நிற பேன்டும் அணிந்து இருந்தார்.ஸ்டெர்லைட் ஆலைகள் சம்பந்தப்பட்ட யாரேனும் முகிலனை கடத்தி இருக்க கூடும் என்று கடந்த 17ம்தேதி எழும்பூர் ரயில் நிலைய காவல் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர்- இளையோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் லயோலா மணி புகார் ஒன்று அளித்தார். அதன்படி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து முகிலன் செல்போன் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை ெபற்று விசாரணை நடத்தினர். அப்போது, முகிலன் சம்பவத்தன்று எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும், அவரது செல்போன் செங்கல்பட்டு வரை சிக்னல் இருந்துள்ளது. அதன் பிறகு செல்போன் சிக்னல் துண்டிக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.