சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 3 ஏரிகள் வறண்டு விட்டது. இந்த சூழ்நிலையில், பூண்டி ஏரியும் வேகமாக வறண்டு வருவதால் ஏரிகளில் இருந்து குடிநீருக்கு தண்ணீர் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் ேதவையை பூர்த்தி செய்வதில் பூண்டி, புழல் ேசாழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த 4 ஏரிகள் வடகிழக்கு பருவமழை நம்பியே உள்ளது. இந்த நிலையில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் குறைவாக மழை பெய்தது. இதனால், ஏரிகளின் நீர் மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. இதனால், கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது. அதன்விளைவாக ஆந்திரா அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டது. 1 டிஎம்சி வரை தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 372 மில்லியன் கன அடி (0.37 டிஎம்சி) மட்டுமே நீர் கிடைத்தது. இதனால், தற்போது குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 1080 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரி, 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி கடந்த 10 நாட்களுக்கு முன்பு வறண்டு போய் விட்டது. இதனால், அந்த ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 82 மில்லியன் கன அடி மட்டுமே உள்ளது. மேலும்,3,330 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 8 மில்லியன் கன அடி மட்டுமே உள்ளது. இதில், புழல் ஏரியில் இருந்து தற்போது 20 கன அடி வீதம் மோட்டர் பம்ப் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் வறண்டு விடும் என்பதால், அங்கு தண்ணீர் எடுப்பது நிறுத்தப்படும்.