திருவொற்றியூர்: எர்ணாவூர் சுடுகாட்டில் கடந்த 2 மாதமாக மின் மோட்டார் பழுதடைந்துள்ளதால், இறுதி சடங்கு செய்வதற்கு தண்ணீர் வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர். திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட எர்ணாவூரில் மாநகராட்சி சுடுகாடு உள்ளது. இதை, 3, 4, 5 ஆகிய வார்டுகளை சேர்ந்த பர்மா நகர், நேதாஜி நகர், பாரதியார் நகர், பாரத் நகர், அனல் மின் நிலைய குடியிருப்பு, ராமநாதபுரம் போன்ற 25 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், சுடுகாடு முழுவதும் குப்பை குவியலாகவும், புதர் மண்டியும் காணப்படுகிறது. மேலும், தண்ணீர் வசதிக்காக அமைக்கப்பட்ட மின் மோட்டார் கடந்த 2 மாதங்களாக பழுதாகி உள்ளது. இதனை, இதுவரை அதிகாரிகள் சீரமைக்கவில்லை. இதனால், சடலத்தை புதைக்க, எரிக்க வரும் பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் கடும் சிரமப்படுகின்றனர்.