பெண் குழந்தையை பார்க்க மறுத்த தந்தைக்கு அடிஉதை

பெரம்பூர்: பெண் குழந்தை பிறந்ததால் பார்க்க மறுத்த தந்தைக்கு சரமாரி அடி விழுந்தது. இதுதொடர்பாக, 2 பேரை போலீசார் கைது செய்தனர். எண்ணூர் காசி கோயில் குப்பத்தை சேர்ந்தவர் நரேந்த் குமார் (35), மீனவர். இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில், கடந்த வாரம் அவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.  இதுபற்றி நரேந்த் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெண் குழந்தை பிறந்ததால், விரக்தியடைந்த அவர், நேரில் சென்று குழந்தையை பார்க்கவில்லை என கூறப்படுகிறது. உறவினர்கள் வற்புறுத்தலின் பேரில், நேற்று முன்தினம் இரவு குழந்தையை பார்க்க சென்றுள்ளார். அங்கு, மது போதையில் இருந்த மனைவியின் உறவினர்களான ஸ்டீபன் (25), டோனி (26) ஆகியோர், குழந்தை பிறந்தபோது நேரில் வந்து பார்க்காதது குறித்து கேட்டுள்ளனர். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஸ்டீபன், டோனி ஆகியோர் சேர்ந்து நரேந்த் குமாரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதுகுறித்து நரேந்த் குமார் கொடுத்த புகாரின்படி, காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டீபன், டோனி ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: