சொத்து தகராறில் விபரீதம் பெண்ணை காரில் கடத்தி தனி அறையில் சித்ரவதை

அண்ணாநகர்: சொத்து தகராறில் பெண்ணை காரில் கடத்திச்சென்று, தனியறையில் அடைத்து சித்ரவதை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் திலகவேணி (51). இவர், அதே பகுதியில் உள்ள சகாய ராணி என்பவருக்கு சொந்தமான நிலத்தை ₹50 லட்சத்துக்கு வாங்குவதற்கு முடிவு செய்தார். இதற்காக, ₹35 லட்சத்தை முன்பணமாக சகாய ராணியிடம் கொடுத்து, தனது பெயரில் இடத்தை பத்திரப்பதிவு செய்துள்ளார்.  மீதமுள்ள ₹15 லட்சத்தை தர 2 வருட கால அவகாசம் கேட்டுள்ளார். அதன்பிறகு ₹5 லட்சத்தை கொடுத்துவிட்டு, மீதமுள்ள ₹10 லட்சத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பலமுறை அவரிடம் பணத்தை கேட்டும் கொடுக்கவில்லை, என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சகாய ராணியின் கணவர் தாஸ், திலகவேணியை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘‘உங்களிடம் நேரில் பேச வேண்டும். அமைந்தகரை பகுதிக்கு வாருங்கள்’’ என்று அழைத்துள்ளார். இதன்படி திலகவேணி அங்கு சென்றுள்ளார். அப்போது, தாசுடன் காரில் வந்த 3 பேர், திலகவேணியை காரில் கடத்தினர். திலகவேணி “என்னை காப்பாற்றுங்கள்” என கூச்சலிட்டுள்ளார். இதனால் 4 பேரும் திலகவேணியின் வாயை துணியால் கட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து, சரமாரியாக தாக்கி, ₹10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.  அங்கிருந்து தப்பிய திலகவேணி, இதுபற்றி நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி போலீசார் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனிடையே காயமடைந்த திலகவேணி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அமைந்தகரை போலீசார், திலகவேணியை காரில் கடத்திச்சென்று அடித்து சித்ரவதை செய்த தாஸ் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: