வேளச்சேரி: தரமணி கட்டபொம்மன் தெருவில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு, மேற்பார்வையாளராக ராஜ்குமார் (40) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடையில் மது விற்பனை செய்த ₹5.30 லட்சத்தை கடையின் கல்லாப் பெட்டியில் வைத்துவிட்டு, கடையை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில், நேற்று மதியம் வழக்கம்போல் கடையை திறப்பதற்காக வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ₹5.30 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக மேற்பார்வையாளர் ராஜ்குமார் தரமணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சென்று கடையில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.